முகப்பு
ஸ்பெஷல்

காது கேட்கிற மிஷின் வாங்கித்தாய்யா... கருப்பாயி பாட்டிக்கு விஜய் அளித்த பதில்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... 29 ஆண்டுகளுக்கு முன் பாட்டி ஒருவருக்குப் பதிலளித்த விஜய்...

Updated On : 18 ஜூன் 2026, 3:32 pm IST
குஷி படத்தில் விஜய்
பகிர்:

1997-ல் பாட்டி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்திற்கு தற்போதைய முதல்வர் விஜய் எழுதிய பதில் கடிதம்.

என் ஆசை பேரன் விஜய்க்கு.....

கருப்பாயி பாட்டி எழுதுவது.... நானும்.... எ... புள்ளைங்க பேரப்புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கோம்.... உங்க வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா...?

Advertisement

Advertisement

இந்த வயசான காலத்தில நான் யாருக்கும் கடிதாசி போட்டதில்லே. உனக்குத்தான் நான் போடுறன். எங்க ஊருல பொங்கலு அன்னைக்கு தெருப் பசங்க எல்லாம் சேர்ந்து வீடியோ... காட்டினானுங்க. அப்போ... "பூவே... உனக்காக.... படம் போட்டானுங்க. அதில நீ அருமையா நடிச்சிருக்க...

அந்தப் படம் பார்த்ததிலிருந்து எனக்கு நல்ல உறக்கம் கிடையாது... "ஐய்யா.... ராசா... நானு வேணுன்னா அந்த பொண்ணுகிட்ட கேட்டு உனக்கு கண்ணாலம் பண்ணி வைக்கட்டுமா...?

அந்த பொண்ணை நீ மனசுல நினைச்சுகிட்டு கஷ்டப்படுறத பார்த்தா ஏ... மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...? நீ மஹாராசா மாதிரி இருக்க.... நீ நடந்து வந்தா இந்த ஊரே ஆடும்... ஆனா.... உன்னைக் கட்டிக்க அவளுக்கு கொடுத்து வைக்கல.... என் பேரன் விஜய்யை கட்டிக்க எத்தனையோ பொண்ணுங்க கியூவிலே நிக்கறாங்க.. இதெல்லாம் அவுளுங்களுக்கு எங்கிருந்து தெரியப் போகுது.

ஐயா... நீ அவளை மனசுல வைச்சிட்டு கவலைப்படாதே. மறந்திடு. நான் உனக்கு தேவதையாட்டும் பொண்ணு பார்த்து கண்ணாலம் கட்டி வைக்கிறேன். ஐயா இந்த பாட்டிக்கு சரியா காதுதாய்யா கேட்க மாட்டுது... எனக்கு காது கேக்கற மிஷின் வாங்கி அனுப்புப்பா... மறக்காமல் எனக்கு வாங்கி அனுப்பவும்.

இப்படிக்கு

உன் பாட்டி கருப்பாயி,

3-பாரதி தெரு, அல்லிநகர், மதுரை.

-------------

பதில்:

கருப்பாயி பாட்டிக்கு -

உங்கள் பேரன் விஜய் எழுதுவது!

எத்தனையோ ரசிகர் ரசிகைகளின் கடிதங்களை படித்துப் படித்து பழக்கப்பட்ட எனக்கு ஒரு வயதான பாட்டியின் கடிதத்தை படிக்கிறபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்கு வருகிற கடிதங்களில் எல்லோரும் புகழ்ந்தும் பாராட்டியும் எழுதுவார்கள். ஆனால் உங்கள் கடிதம்தான் எனக்காக கவலைப்பட்டு எழுதியிருந்தது.

நீங்கள், "பூவே உனக்காக..." படம் பார்த்து அதில் அஞ்சு அரவிந்த் என்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதற்கு கவலை தெரிவித்து எழுதியிருந்தீர்கள்.அது சினிமா நிஜவாழ்க்கை இல்லை அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். தூங்காமலெல்லாம் இருக்காதீங்க... வயசான காலத்தில் நல்லாத் தூங்குங்க... எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க...

சினிமாவிலேயே எனக்கொரு கஷ்டம் என்பதை உங்களால் தாங்க முடியலே... அப்போ.. என்மேல் நீங்கள் எவ்வளவு பாசம் வைச்சிருக்கிங்க என்பதை நான் உணர்ந்துகொண்டேன். உங்கள் கடிதத்தைப் பார்த்து எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். கண்டிப்பா காது கேட்கிற மிஷின் வாங்கி அனுப்புறேன்.

இப்படிக்கு உங்கள் பேரன்

விஜய்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் மார்ச் 1, 1997 ஆம் ஆண்டு வெளியான கடிதம்.

The current Chief Minister, Vijay, wrote a reply to a letter an elderly woman had sent him in 1997.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.