சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்கு 16,000 மாணவர்கள் விண்ணப்பம்...
புது தில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம் சைபர் தாக்குதல்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) சீரானது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையை மேற்கொள்ளும் ‘ஆன்மாா்க்’ வலைதளத்தில் நிலவிய பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நிகழாண்டில் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அத்தளம் https://www.cbse.gov.in/newsite_old/rchk.html செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) சீரானது. அதன் வழியே மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏற்கெனவே தங்கள் திருத்தப்பட்ட விடைத் தாள்களை விண்ணப்பித்து அதன் ஸ்கேன் செய்டயப்பட்ட நகலைப் பெற்றிருத்தல் அவசியம்.
இத்தளத்தில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 6 நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தளம் சீரான பின், முதல் 9 - 10 மணிநேரத்தில் 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டலுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இன்னும் 3 நாள்கள் கால அவகாசம் இருப்பதால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.