பாலியல் தொல்லை! தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு!
தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தவெகவின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினராக குட்டி என்கிற பிரகாசம் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண், கட்சித் தலைமையில் புகார் கொடுத்து 6 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக வெளியே யாரிடமாவது கூறினால் கூலிப்படை மூலம் குடும்பத்தையே கொன்று விடுவேன் என்று குட்டி மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக வேட்பாளர் குட்டி மீது பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.