மேற்கு வங்கத்தில் 2021-இல் நடந்தது போல மீண்டும் நடக்காது: பாஜக
மேற்கு வங்கத்தில் 2021-இல் நடந்தது போல மீண்டும் நடக்காது என பாஜக தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் நாளை (மே 4) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, 2021-இல் நடந்தது போல மீண்டும் நடக்காது என பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா இன்று (மே 3) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சில தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை (மே 2) நடத்தப்பட்டது.
இதனிடையே ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் வரும் மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Advertisement
இந்த நிலையில் முழுமையாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, “நாளைய வாக்கு எண்ணிக்கை எவ்விதத் தடையுமின்றி நடைபெறும். எல்லா இடங்களிலும் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படும். நமது வாக்கு எண்ணும் முகவர்கள் முழு நேரமும் பணியில் இருப்பார்கள். 2021-இல் நடந்தது போல மீண்டும் நடக்காது. மக்கள் அளித்த வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படாது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு, உச்ச நீதிமன்றமே பதிலளித்துள்ளது.
எந்த விதமான வன்முறையும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள். கடந்த முறை வெற்றி பெற்றதன் காரணமாக யாரோ ஒருவர் உங்கள் வீட்டை உடைத்தாலோ அல்லது உங்கள் தொழிலாளியைக் கொன்றாலோ, இந்த முறை அவர்களுக்கும் அதையே செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. அது நடக்கக்கூடாது. நமது மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது” எனத் தெரிவித்தார்.
மேலும், 2021 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.