5.1.1976: சிறையை தாக்கி 100 கைதிகளை விடுவித்தனர் - வட லெபனானில் முஸ்லிம் கோஷ்டி கைவரிசை
வட லெபனானில் சிறை தாக்கப்பட்டு கைதிகளை விடுவித்தது பற்றி...
பெய்ரூட், ஜன. 3 - வட லெபனானில் உள்ள அரசுச் சிறைச்சாலை ஒன்றில் முஸ்லிம் பயங்கரவாதிகள் இன்று தாக்கி, சிறைக் காவலருடன் ஒன்றரை மணி நேரம் போராடிய பின் 100க்கு மேற்பட்ட கைதிகளை விடுவித்ததாக போலீஸார் கூறினர்.
பெய்ரூட்டிற்கு 95 கிலோ மீட்டர் தொலைவில் முஸ்லிம், கிறிஸ்துவ கிராமவாசிகளிடையே நடந்த மோதலைத் தொடர்ந்து மார்ட்டர், ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அல்லது சிறைத் தாக்குதலில் எத்ததை பேர் மாண்டனர் அல்லது காயமுற்றனர் என்ற விவரம் தெரியவில்லை.
நில உச்சவரப்பு குறையக்கூடாது - மத்திய அரசிற்கு விவசாய கமிஷன் சிபாரிசு - கிராமங்களில் விவசாயி சேவை சங்கங்கள் துவக்க யோசனை
கோயம்பத்தூர், ஜன. 4 - இப்போதுள்ள நில உச்சவரம்புகளில் இன்னும் வெகுகாலத்துக்கு மாறுதல் எதுவும் செய்யக் கூடாது என்று மத்திய அரசிற்கு தேசிய விவசாய கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
Advertisement
Advertisement
கிராமங்களில் விவசாயி சேவை சங்கங்களை துவங்கும்படியும் யோசனை கூறியிருக்கிறது.
விவசாயம் பற்றிய தேசிய கமிஷனின் தலைவர் திரு. நாதுராம் மிர்தா இத்தகவலை இன்று இங்கு வெளியிட்டார். தற்போது தங்களிடமுள்ள நிலத்தின் அளவு மேலும் சுருங்கிவிடாது என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இருந்தால்தான் நிலத்தை அபிவிருத்தி செய்வதிலும் உற்பத்திப் பெருக்கத்திலும் அவர்களுக்கு ஊக்கமிருக்கும் என்றார்.
“விவசாயிகளை பெரிய நிலக்காரர், வேறிடத்தில் வசிக்கும் நிலக்காரர் என்றெல்லாம் பாகுபடுத்திப் பேசுவது அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. நில உச்சவரம்பு அமல் செய்யப்பட்ட பிறகு ‘பெரிய நிலக்காரர், சிறிய நிலக்காரர்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்புவது அர்த்தமற்றது” என்றார்.
இம்மாத இறுதியில் தமது கமிஷன் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அதிலுள்ள யோசனைகளை, நிலவரம்பு பற்றிய யோசனைகளை, அரசு ஏற்றுக் கொள்ளுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் திரு. மிர்தா குறிப்பிட்டார்.
கிராம அளவிலும், தாலுகா மற்றும் ஜில்லா அளவிலும் “விவசாயி சேவை சங்க”களை நிறுவ வேண்டுமென்பது தமது கமிஷனின் சிபாரிசுகளில் ஒன்று என்றார் மிர்தா. இவை விவசாயிகளுக்கு கடன் வசதி, உரம் முதலான விவசாய முதலீடுகளை அளிப்பதுடன், விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியையும் செய்யும். விவசாயிகளின் எல்லாப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் இந்த சங்கத்தில் இடம் பெறுவர்.
தற்போதுள்ள கூட்டுறவு சங்கங்களின் சில குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த விவசாய சேவை சங்கங்களை கமிஷன் சிபாரிசு செய்துள்ளது என்றார் மிர்தா. ...
A Muslim group attacked the prison and freed 100 prisoners - an incident in North Lebanon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.