FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மருத்துவம்

இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு ஏன்?

இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Updated On : 19 மார்ச் 2024, 3:57 pm IST
பகிர்:

30 வயது இளைஞருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது, அவரது உலகமே தலைகீழானது. ஏற்கனவே தனது தந்தையை பெருங்குடல் புற்றுநோய்க்கு பறிகொடுத்த அந்தக் குடும்பம், மீண்டும் ஒரு புற்றுநோயை எப்படி எதிர்கொள்ளும்.

எனினும், அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சையின் பலனாக தற்போது அவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டுள்ளார். ஆனால், அவரது கொடுங்கனவிலும் கூட, அவருக்கு இந்த சின்ன வயதிலேயே பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

இதுவரை வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று கூறப்பட்ட புற்றுநோய்கள் கூட, இனி இளைஞர்களையும் தாக்கி வருகிறது. இனி, புற்றுநோய்க்கு எந்த வயது வரம்பும் இல்லை என்பதே நிதர்சனமாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டி, பெருங்குடல் புற்றுநோய் நீண்ட காலமாக இருந்தாலும், பெருங்குடல் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் அண்மைக்காலமாக கடுமையாக அதிகரித்திருப்பதாக மெடான்டா இயக்குநரும் தலைவருமான டாக்டர் அமன்ஜீத் சிங் கூறினார்.

இதுவரை வயதானவர்களை மட்டுமே தாக்கி வந்த பெருங்குடல் புற்றுநோய், தற்போது இளையவர்களையும் தாக்கும் என்பதும், அதுவும் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எங்கள் மருத்துவமனையில், பெருங்குடல் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் 40 வயதுக்குள்பட்ட ஏராளமானோரை பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலானோருக்கு நோய் முற்றியநிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 20 வயதுக்கு உள்பட்டவர்களுக்கும் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

மரபணு பிரச்னை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுபாடுகள் இந்த மோசமான நிலைக்குக் காரணிகளாக அமைந்துவிட்டன. அதோடு, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒன்று கரோனா தொற்று, பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்வதிலிருந்து தடுத்ததே, தற்போது முற்றிய நிலையில், நோயுடன் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், வாழ்முறை மாற்றம் மற்றும் மரபணு பிரச்னைகளும் சேர்ந்துகொள்கின்றன.

உலகிலேயே அதிகமானோரை தாக்கும் புற்றுநோய் வகையில் இது நான்காவது இடத்திலும், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், மரணத்தை விளைவிக்கும் காரணிகளில் 13வது இடத்தில் உள்ளது. பெருங்குடல் புற்றுநோய் என்பது, மிகச் சிறியதாக, புற்றுநோய் அல்லாத செல்களைக் கொண்ட கட்டிகளாகத்தான் தோன்றுகின்றன. ஆனால், அது உடனடியாகக் கண்டறியப்பட்டு அகற்றப்படாவிட்டால், பின்னாளில் வளர்ந்து புற்றுநோயாக மாறிவிடுகிறது.

வெளிநாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் மிக இளம் வயதிலேயே பெருங்குடல் புற்றுநோய் பாதிக்கிறது.

பெங்களூருவில் இயங்கி வரும் போர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சந்தீப் நாயக் கூறுகையில், ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. வயதைத் தாண்டி, குடும்ப மருத்துவ வரலாறு, சாப்பிடும் இறைச்சி, நீரிழிவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவையும் காரணங்களாக உள்ளன.

ஆரம்ப நிலையில், பெருங்குடல் புற்றுநோய்க்கு எந்த குறிப்பிட்ட அறிகுறியும் காட்டுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். நோய் முற்றிய நிலையில், பெருங்குடலில் இருக்கும் புற்றுநோய் கட்டியின் அளவு மற்றும் இருக்குமிடத்துக்கு ஏற்ப அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. பலவீனமடைதல், மயக்கம், ரத்தசோகை, உடல்எடை இழப்பு, சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் போன்றவை ஏற்படுகிறது. ஒருவேளை இதில் அனைத்து அறிகுறிகளும் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

ஒருவேளை, யாராவது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பவர்களாக நினைத்தால் அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய்க்கு நவீன மருத்துவமுறைகள் வந்துவிட்டதால், முன்கூட்டியே கண்டறியும்போது சிகிச்சையளித்து குணமடைய வைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவேளை, இந்தக் கட்டி கல்லீரலை தாக்கினாலும் கூட அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments