முகப்பு
செய்திகள்

ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயம்!

ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயங்கள்!

Updated On : 18 மார்ச் 2024, 3:36 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: சுற்றுச்சூழலில் இருக்கும் சிறு பிளாஸ்டிக் துகள்கள், நமது உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் பயணிப்பதால், மாரடைப்பு, பக்கவாத அபாயங்கள் நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தாலியில் உள்ள கம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கரோடிட் தமனியில் ஏற்படும் கொழுப்பு அடைப்புகளை அகற்றும் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 257 நோயாளிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். கரோடிட் தமனி என்பது, கழுத்தின் பக்கவாட்டில் இருந்துகொண்டு, மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்கிறது.

எவ்வாறு இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் கொழுப்புகள் சேர்கிறதோ அதுபோலவே கரோடிட் தமனியிலும் கொழுப்புகள் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதுபோல தமனியில் அடைப்புகள் ஏற்படும்போது அவை, ரத்த ஓட்டத்தை தடை செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், அறுவைசிகிச்சைக்குள்ளான 257 நோயாளிகளின் தமனியிலிருந்து அகற்றப்பட்ட கொழுப்புப் படலத்தில் 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்துகள்கள் மற்றும் நானோபிளாஸ்டிக் அல்லது 1000 நானோமீட்டர்களைவிட சிறியதான துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, பாலிவினைல் குளோரைடு எனப்படும் துகள்களும் அந்த திசுப் படலத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 1000 நானோ மீட்டர்களை விடவும் சிறிதான பிளாஸ்டிக் துகள் இருந்த படலங்கள் இளைஞர்களுக்கே அதிகம் இருந்துள்ளது. பெரும்பாலும் ஆண்களாகவும் நீரிழிவு நோயாளிகளாகவும் இதய நோய் இருப்பவர்களாகவும் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, தமனி நாள அடைப்பின் திசுப் படலத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதய நோய் பாதிப்பு ஆரம்பித்ததிலிருந்து 34 மாதங்கள் அவர்களது உடலாநிலையை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

அதில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்தவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தாத மாரடைப்பு அல்லது பக்கவாதம் அல்லது இதில் எந்தக் காரணியும் இல்லாமல் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் 4.5 மடங்கு அதிகம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், நமது சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள், உடலுக்குள் செல்லாமல் தடுத்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அபாய எச்சரிக்கையாக உணர்த்துகிறது என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.