முகப்பு
இந்தியா

தெரிந்தே விதிகளை மீறிய சிதம்பரம்: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் தகவல் 

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம்  தெரிந்தே விதிறல்களில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஆகஸ்ட் 2018, 4:50 pm IST
பகிர்:

புது தில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம்  தெரிந்தே விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த பொழுது   ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு  விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனம் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக அப்பொழுது நடைமுறையில் இருந்த அந்நிய முதலீடு தொடர்பான நடைமுறை விதிகளை ப.சிதம்பரம் தெரிந்தே மீறியதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த விதிமீறல் நடைபெற்ற காலகட்டத்தில், வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அசோக் சாவ்லா, இணைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா, செயலாளர்கள் ராம் ஷரன், மற்றும் தீபக் குமார் மற்றும் அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அசோக் ஜா உள்ளிட்டோரும் சிதம்பரத்துடன் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வியாபார பரிவர்த்தனையில் ஏர்செல் நிறுவனத்தின் பத்து ரூபாய் முகமதிப்பு கொண்ட18 கோடி பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் சுமார் 198 ரூபாய் சந்தை விலைக்கு வாங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்த முதலீடு சுமார் 3,650 கோடி ரூபாயாகும்.

அப்போது அந்நிய முதலீடு தொடர்பாக நடைமுறையில் இருந்த அரசு ஆணையின்படி நிதி அமைச்சரால் தனிப்பட்ட வகையில் 600 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கமுடியும். இதற்கு மேல் உள்ள முதலீடுகள் என்றால் அந்த பரிவர்த்தனைகள் எல்லாம்  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3,650 கோடி ரூபாய் முதலீடு என்பது மறைக்கப்பட்டு வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக காட்டி சிதம்பரமே அனுமதியளித்துள்ளதாக  சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டிற்கு, ப.சிதம்பரம் தெரிந்தே விதிமுறைகளை மீறி அனுமதியளித்து தவறு செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments