டிச. 22-இல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் உறுதி: முன்னாள் முதல்வர் சித்தராமையா
டிச.22-இல் கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது உறுதி என்றார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.
டிச.22-இல் கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது உறுதி என்றார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.
பெலகாவி சுவர்ண விதான செளதாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முன்னாள் முதல்வரும், ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போகிறது. இந்த நிலையில், டிச. 22-ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்வது உறுதி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துள்ளனர். அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வட கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அனைத்தையும் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவிகளில் இன்னும் 6 பேருக்கு வாய்ப்புள்ள நிலையில், அதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டுள்ளதால், கட்சியின் மேலிடம் யாருக்கு வாய்ப்புத் தருவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
Advertisement
Advertisement
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிருப்தி அடையும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், கூட்டணி அரசைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அமைச்சரவை விரிவாக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகின்றனர். தென் கர்நாடகத்தைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்களில் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, வட கர்நாடகத்தைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்களில் 5 பேருக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி சார்பில் வாய்ப்பளித்துள்ளது.
எனவே, அமைச்சரவையில் மீதமுள்ள 6 இடங்களுக்கு வட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வட கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களில் வீரசைவர், லிங்காயத்து பிரிவினருக்கு கூடுதலாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் மேலிடத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, எம்.பி.பாட்டீல், எம்.எல்.ஏக்கள் துக்காராம், நாகேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.