FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத்தரகரின் ஜாமீன் மனு மீது 22-இல் உத்தரவு

மிகமுக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


மிகமுக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 22-ஆம் தேதி வழங்கப்படும் என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
அவருடைய நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து மிகமுக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. 
அந்த வழக்கில் மிஷெல் உள்ளிட்ட பலருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அண்மையில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து, மிஷெலை கடந்த 15 நாள்களாக காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மிஷெல் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னைக் காவலில் எடுத்து விசாரிக்கவும், தொடர்ந்து காவலில் வைத்திருக்கவும் அவசியமில்லை. என்னுடைய கையெழுத்து மாதிரிகளை சிபிஐ பெற்றுள்ளது. 
அதை சோதிப்பதற்கான ஆவணங்கள் சிபிஐயிடம் இல்லை. சிபிஐ கோரிய அனைத்து ஆவணங்களையும் அளித்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று தெரிவித்தார். 
இந்த மனு மீதான விசாரணை தில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மிகுந்த சிரமத்துக்கு இடையே மிஷெல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 
ஆரம்பத்திலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும், அவருக்குப் பல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் நாட்டை விட்டுத் தப்பித்து விடவும் வாய்ப்புள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதனைக் கேட்ட நீதிபதி, மிஷெலின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 22-ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மிஷெலை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments