ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு!
ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.
புதுதில்லி: ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் ஐந்து புனிதக் கடமைகளில் ஹஜ் புனிதப் பயணம் செல்வதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவது நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில் ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாயன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
Advertisement
இனி ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியம் ரத்து செய்யப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மானியத் தொகையினை படிப்படியாக நிறுத்தும் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கையளிப்பதற்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டியின் அறிக்கை அடிப்படையில்தான் தற்பொழுது ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான அரசு மானியத்தினை ரத்து செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்வோர் விமான மார்க்கமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது மத்திய அரசானது சவுதி அரேபிய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துள்ளது. அதன்படி ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையினை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், கடல்வழி போக்குவரத்தினை மேற்கொள்ளவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணச் செலவானது வெகுவாகக் குறையும்
இந்த ஆண்டு மட்டும் 1.75 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மானியமாக மட்டும் குறைந்த பட்சம் ரூ.500 கோடி செலவாகிறது. இனி இந்த மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.