முகப்பு
இந்தியா

புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவம்: கலவரத்தைத் தூண்டிய முக்கிய குற்றவாளி கைது 

புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவத்தில், கலவரத்தைத் தூண்டிய முக்கிய குற்றவாளியான யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 3 ஜனவரி 2019, 3:41 pm IST
பகிர்:

புலந்த்சாஹர்:   புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவத்தில், கலவரத்தைத் தூண்டிய முக்கிய குற்றவாளியான யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர் மாவட்டத்தில் நிகழ்ந்த பசு வதை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 3-ஆம் தேதி ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல் துறை ஆய்வாளர் சுபோத் சிங்கை வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கடுமையாக தாக்கியது. 

காயமடைந்த அவரை காரில் ஏற்றிச் சென்ற போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் சுபோத் சிங் உள்பட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு, காவல்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநர், மாஜிஸ்திரேட் ஆகிய மூன்று தரப்பினரும் தனித்தனியே விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது.

புலந்த்சாஹர் வன்முறை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர்  யோகேஷ் ராஜ் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாகி உள்ள யோகேஷ் ராஜ் வெளியிட்ட விடியோவில் ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்கின்ற ஜீது ஃபெளஜி, துப்பாக்கியால் காவல் துறை ஆய்வாளரை சுடுவது போன்ற காட்சி இருந்ததை அடுத்து, விடியோ குறித்து ராணுவத்துக்கு உத்தரப் பிரதேச காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து சோஃபோர் பகுதியில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையில் இருந்த அவரை ராணுவத்தினர் கைது செய்து, விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் சுபோத் குமார் சிங்கிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்ட பிரசாந்த் நாத் என்பவனை போலீஸார் கடந்த வாரம்  கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் சுபோத் குமார் சிங் சுடப்படுவதற்கு முன்பாக கோடரியால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சுபோத் சிங்கை  கோடரியால் தாக்கியதாகக் கருதப்படும் குற்றவாளி கலுவா என்பவரை போலீஸார் தேடி வருந்தனர். இந்தநிலையில் புலந்த்ஷெஹர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த கலுவாவை திங்கள் இரவு உ.பி போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கலவரம் நடக்கும்போது தான் கோடாரியால் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டு இருந்ததாவும், அப்போது சிலர் காவல்துறை அதிகாரியை தாக்கியதை பார்த்து அவரை தாம் கோடாரியால் தாக்கியதாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் கலுவா தெரிவித்துள்ளார். 

கலுவாவுடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவத்தில், கலவரத்தைத் தூண்டிய முக்கிய குற்றவாளியான யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ளாள் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யோகேஷ் ராஜ் புலந்த்சாஹர் நகருக்கு அருகே  பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது புலந்த்சாஹரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கொத்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹுர்ஜா என்னும் பகுதியிலிருந்து யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டார். 

இவவாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.