முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் கலவரம்: இணைய சேவைகள் முடக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நள்ளிரவு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் கலவரமாக மாறியது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜஸ்தான் ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடிய இரு தரப்பினர் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டனர்.

இந்த மோதலை தடுக்க முயன்ற காவல் துறை ஆணையர் உள்பட 4 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஜோத்பூர் பகுதி முழுவதும் இணைய சேவைகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

கலவரம் குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளிட்ட வேண்டுகோளில், “ஜோத்பூர், மார்வரின் பாரம்பரியமான அன்பு மற்றும் சகோதரத்துவத்தை மதிக்கிறேன். அதேபோல், அமைதி காக்கவும், சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்கவும் ஒத்துழைப்பு தர அனைத்து தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகை அன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருப்பது மாநிலம் முழுவதும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.