அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகான், நல்பாரி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு அசாமில் நிலச்சரிவில் சிக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மேடான பகுதிகளிலிருந்து சரிந்த பாறைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் ரயில் இணைப்பு பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 10321.44 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.