புது தில்லி: சஃப்தர்ஜங் பகுதியில் உள்ள மருத்துவமனையின் மாணவர்கள் விடுதியில், மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதன்கிழமை நள்ளிரவு 3.30 மணியளவில், மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தில்லியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிமாணவி, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் எம்பிபிஎஸ் பயிலும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி, அந்த மருத்துவமனையில் இறுதியாண்டுக்கான மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?
அவரது அறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. அவரது தோழிகள் அறையை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்று அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மன அழுத்தத்துக்கான மாத்திரைகளின் காலி கோப்பைகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரது நண்பர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், பெற்றோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.