முகப்பு
இந்தியா

காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கேரள மாநிலம் பாறசாலாவில் ஷரோன் என்ற இளைஞர் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி கிரீஷ்மா காவல்நிலையத்திலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

Updated On : 31 அக்டோபர், 2022 at 3:22 PM
காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:12 PM

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறசாலாவில் ஷரோன் என்ற இளைஞர் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி கிரீஷ்மா காவல்நிலையத்திலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், காவல்நிலையத்தில் உள்ள கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த கழிப்பறை சுத்திகரிப்பானைக் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட கிரீஷ்மா உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனை விஷம் கொடுத்துக் கொலை செய்ததாக, கிரீஷ்மா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், கிரீஷ்மா தற்கொலை நாடகம் ஆடியது மருத்துவ சிகிச்சையின்போது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் அவர் தற்கொலை முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டால், காவல்நிலையத்தில் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விசாரணைக்காக, நெடுமன்காடு காவல்நிலையத்துக்கு கிரீஷ்மா நேற்று இரவு கொண்டு வரப்பட்டார். அவர் பயன்படுத்திய கழிப்பறையில் சுத்திகரிப்பான்கள் எதுவும் வைக்கப்படவில்லை. ஆனால், மற்றொரு கழிப்பறையில் இருந்தது. அதை எடுத்து அவர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் கிரீஷ்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் உடல்நலம் தேறியதும் விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, ஷரோனை விஷம் கொடுத்துக் கொன்றதை கிரீஷ்மா ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முதலில் பெற்றோருடன் சேர்ந்தும், பிறகு தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொலை செய்யவில்லை என்று கூறிய கிரீஷ்மா, காவல்துறையின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், காவல்நிலையத்திலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.