எதிர்க்கட்சிகளின் ஒரே எண்ணம் மோடியை வீழ்த்துவது ஆனால் அது நடக்காது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன.
அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் இரவு விருந்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எதிக்கட்சிகளின் கூட்டத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் இதை 'மகாகத்பந்தன்' என்று அழைக்கிறார்கள், ஆனால் உண்மையில் இதில் 'பந்தனும்' இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் பிரதமர் மோடியை வீழ்த்துவதுதான், இது சாத்தியமற்றது. பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தை சேர்க்கும்போது ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.