முகப்பு
இந்தியா

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் நவம்பர் 9-ஆம் தேதி ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 8 நவம்பர் 2023, 12:51 pm IST
பகிர்:

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் நவம்பர் 9-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 

மேற்கு வங்க மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷஷி பஞ்சா, பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கும் அரசியலை முன்னெடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர்களை நெருக்கடிக்குள்ளாக்க பாஜக இதுபோன்ற பழிவாங்கும் அரசியலை செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

இதுகுறித்து பேசிய மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா, “பழிவாங்கும் அரசியலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அமைப்புகள் சம்மன் அனுப்புகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் 13 அன்று ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு குறித்து அமலாக்கத்துறையால் சுமார் ஒன்பது மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அபிஷேக் பானர்ஜி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

2014 முதல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்துவரும் அபிஷேக் பானர்ஜி இதற்கு முன்பு நிலக்கரி கொள்ளை வழக்கில் 2021-ஆம் ஆண்டில் தில்லியில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இரண்டு முறையும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.