முகப்பு
இந்தியா

விடுதி மாணவியிடம் அத்துமீறல்: பனாரஸ் பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

ஐஐடி பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவி பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

பனாரஸ் ஐஐடி வளாகத்தினுள் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவம்பர் 2 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஐஐடி பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடந்துசென்ற விடுதி மாணவியை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதனை விடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு இதை யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கல்வி வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார். இதனையறிந்த பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் கூறும்போது, “ஐஐடி வளாகத்தினுள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனாலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனைத் தடுப்பதற்கு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் புகழ்வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதும், மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதும் அவமானகரமானது” என்று தெரிவித்தனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும், வளாகத்தினுள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (நவம்.2) காலையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம்  நடைபெறும் இடத்திற்கு ஐஐடி இயக்குநர் வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை ஆணையாளர், “பிரிவு 354பி, ஐடி சட்டம் 66இ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதற்கு வளாகத்தினுள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறினார். 

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துவருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறும்போது, “பனாரஸ் ஐஐடி வளாகத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது மிகவும் வெட்கக்கேடானது. பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யாத ஐஐடி இயக்குநர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.