நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, "இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்று நவீன இந்தியாவை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பாதுகாவலராக திகழ்ந்தவர். அவரது முற்போக்கு சிந்தனைகள் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாட்டு மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல், எப்போதும் ஒன்றாக வாழ ஊக்குவித்தவர் ஜவஹர்லால் நேரு.” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார். அவர் 1964 ஆம் ஆண்டு மே 27 அன்று காலமானார்.
இந்நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
1964ஆம் ஆண்டில் பிரதமர் நேரு இறந்த பிறகு, பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.