ராணுவத்தை தரம்தாழ்த்தும் பாஜக: காங்கிரஸ் கண்டனம்
ராணுவத்தின் தியாகத்தை தேர்தல் அரசியலுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவரான ஓய்வு பெற்ற கர்னல் ரோகித் சௌத்ரி நேற்று (அக்டோபர் 20) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “மோடி அரசு தனது அரசியல் வளர்ச்சிக்காக, அரசுத் திட்டங்கள் குறித்த சுவரொட்டிகளை ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. அரசுத் திட்டங்கள் தொடர்பான 822 செல்பி மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் பாதுகாப்புத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ராணுவத்தை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: அக்னிவீரா் அம்ரித்பால் சிங்கிற்கு ராணுவம் இறுதிச் சடங்கு செய்யாததற்கு மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கடும் சாடல்
Advertisement
Advertisement
மேலும் பேசிய அவர், “இதுகுறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நமது ராணுவ வீரர்கள் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? நமது ராணுவத்தை பாஜக இந்த அளவுக்கு தரம் தாழ்த்தக்கூடாது. இது சட்டவிரோதம் என்று கருதுவதால்தான், இதுதொடர்பான உத்தரவை ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை தங்கள் இணையதளங்களில் வெளியிடவில்லை.” என்று கூறினார்.
முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “செல்பி மையங்களில் ராணுவ வீரர்களின் வீரம் குறித்த வாசகங்களுக்கு பதிலாக பிரதமர் மோடியை புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களின் உன்னதமான தியாகங்களை பாஜக தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருவது மிக மோசமான நடவடிக்கையாகும்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.