முகப்பு
இந்தியா

முக்கியத்துவத்தை இழக்கிறதா பல்லில்லாத புலி? வேண்டும் சீர்திருத்தம்!

நோட்டா முக்கியத்துவத்தை இழந்துவரும் நிலையில், அது குறித்து சீர்திருத்தம் வேண்டும் என்கிறார்கள்.

Updated On : 1 ஏப்ரல் 2024, 10:50 am IST
அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக விளங்கும் நோட்டா 
பகிர்:

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டா (எந்த வேட்பாளரும் இல்லை) என்ற வாய்ப்பு, ஆரம்பத்தில் வாக்காளர்களிடம் கணிசமான வரவேற்பைப் பெற்றாலும் நாளடைவில் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கிவிட்டது. இதில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

ஒவ்வொரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்யாமல் இருக்கும் வகையில், வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவே நோட்டா கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த நோட்டாவுக்கு விழும் வாக்குகள், ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே வருகிறது, இதனால், ஆரம்பத்தில் அதிக முக்கியத்துவம் பெற்று பேசப்பட்ட நோட்டா அதன் முக்கியத்துவத்தை இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) நோட்டா சேர்க்கப்பட்டது. இது, தேர்தலில் நடத்தப்பட்ட மிகப்பெரிய புரட்சியாகவே அப்போது பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ​​கிட்டத்தட்ட 24,591 வாக்காளர்கள் 49-O விருப்பத்தை (பூஜ்ஜிய வாக்கு அல்லது எதிர்மறை வாக்கு) தேர்ந்தெடுத்து, களத்தில் உள்ள எந்த வேட்பாளரையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர். 2009 மக்களவைத் தேர்தலில் 18,162 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலின் போது தமிழகத்தில் நோட்டா முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட உடனே நடந்த 2014 மக்களவைத் தேர்தலில், நோட்டாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது, தமிழகத்தில் 5.7 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்தனர். நீலகிரி தொகுதியில் 46,559 பேர் நோட்டாவை தேர்வு செய்திருந்தனர். இந்த தேர்தலில் சிறு கட்சிகள் பெற்ற வாக்குகளை விட நோட்டாவை தேர்வு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​நோட்டா 5.61 லட்சம் வாக்குகள் (1.3 சதவீதம்) பெற்றிருந்தது.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​5.47 லட்சம் (1.27 சதவீதம்) வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருந்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலில், இந்த எண்ணிக்கை 3.45 லட்சமாகக் (0.75 சதவீதம்) குறைந்தது.

நோட்டா பெற்றுவரும் வாக்குகளின் தரவுகளை அடிப்படையாக எடுத்தால், ஒவ்வொரு தேர்தலின்போதும் அது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறதா என்று கேட்டதற்கு, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) மாநில ஒருங்கிணைப்பாளர் பி ஜோசப் விக்டர் ராஜ், 'பல்லில்லாத புலி' என்று அடிக்கடி குறிப்பிடப்படும் நோட்டா, தோல்வியைத் தழுவி வருகிறது.

தேர்தல் முடிவுகளில் நேரடியான தாக்கத்தை நோட்டா ஏற்படுத்த வேண்டும். அதுதான் அதனுடைய முதன்மை நோக்கம், வேட்பாளர்கள் பற்றி வாக்காளர்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணம் அல்லது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக நோட்டா உள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர், வாக்காளர்களால் புரந்தள்ளப்படுவதை அடையாளம் காட்டும் வகையில் நோட்டா அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நோட்டாவை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதிலிருந்து அரசியல் கட்சிகளைத் தடுப்பதே ஆனால், அதனால் எந்த பாதிப்பும் நினைத்தபடி ஏற்படவில்லை. 2009இல், போட்டியிட்ட வேட்பாளர்களில் குற்ற் வழக்குகள் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில், நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு, இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக உயர்ந்துதான் உள்ளது என்கிறார் ராஜ்.

அதாவது பல்லில்லாத புலியாக இருக்கும் நோட்டாவுக்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். அதாவது, நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கும் வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள், தேர்தல் நேரத்தில் நோட்டாவுக்கு அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தலாம் என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments