முகப்பு
இந்தியா

பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.

Updated On : 13 ஆகஸ்ட் 2024, 3:52 pm IST
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவ, மாணவிகள். - ANI
பகிர்:

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த சமபவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், ஓய்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரி மேற்கு வங்க பாஜக தலைவரும், கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கவுஸ்தாவ் பாக்சி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மேற்குவங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில், இளநிலை மருத்துவர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் மிகக் கொடூரமான குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கை சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் அதற்கு மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.