கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு கூடுதல் நிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (ஜூன் 10) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நாடு முழுவதுமுள்ள ஏழை மக்களுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டித்தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதி அளித்து உதவும் வகையில் கடந்த 2015 - 16 முதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தகுதி வாய்ந்த மக்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இதுவரை 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, எரிவாயு (எல்பிஜி) இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளுடன் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.
தற்போது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.