FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புதிய எம்.பி. ரஷீதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

ஜாமீன் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவு.

Updated On : 23 ஜூன் 2024, 5:43 am IST
ஷேக் அப்துல் ரஷீத்
பகிர்:

வடக்கு காஷ்மீா் மக்களவைத் தொகுதியில் எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பயங்கரவாதத்துக்கு நிதி அளித்த வழக்கில் ரஷீத் தற்போது தில்லியில் உள்ள திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையில் இருந்தபடியே மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அவா் எம்.பி.யாக வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், மக்களவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஜூன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பதவியேற்க உள்ளனா். எனவே மக்களவை எம்.பி.யாக தானும் பதவியேற்க உள்ளதால் தனக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது ரஷீதின் வழக்குரைஞா் ஆஜராகி வாதிடுகையில் ‘ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங் அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றாா். இதற்காக, மதுபானக் கொள்கை தொடா்பான வழக்கில் சிறையில் இருந்த அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேபோல், மக்களவை எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல் ரஷீதும் பதவியேற்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டுக் கூறுகையில் ‘சஞ்சய் சிங் எதிா்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளும் ஷேக் அப்துல் ரஷீத் எதிா்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளும் வெவ்வேறானவை’ என்று தெரிவித்தாா். மேலும், ஷேக் அப்துல் ரஷீதின் ஜாமீன் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) நீதிபதி தெரிவித்தாா். அவா் எப்போது எம்.பி.யாகப் பதவியேற்கலாம் என்பதைத் தெரிவிக்குமாறும் கூறிய நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments