நாக்பூர் சாலையோர கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்! வைரலாகும் விடியோ
நாக்பூர் சாலையோர கடையில் பில் கேட்ஸ் தேநீர் குடித்த விடியோ வைரலாகியிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், நாக்பூர் சாலையோர கடையில் தேநீர் குடித்த விடியோ வைரலாகியிருக்கிறது.
நாக்பூரில் சாலையோர தேநீர் கடை வைத்திருப்பவர் டோலி சாய்வாலா என யூடியூபில் மிகவும் பிரபலமானவர். இவரது கடைக்குச் சென்ற பில் கேட்ஸ், ஒரு தேநீர் கேட்டிருக்கிறார். ஆனால், தனது கடைக்கு வந்திருப்பவர் பில் கேட்ஸ் என்றோ, அவர் உலகப் பணக்காரர்களில் ஒருவர் என்றோ டோலி சாய்வாலாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும், அதில் ஒன்றுதான் இந்த தேநீர் தயாரிப்பு என்றும் பில்கேட்ஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார்.
தனித்துவமான ஸ்டைலில் தேநீர் போடுவதில் வல்லவரான டோலி சாய்வாலா, மிகவும் ருசியான, இஞ்சி, ஏலக்காய் தட்டி ஒரு அருமையான தேநீரை பில் கேட்ஸ் கையில் கொடுக்க, அவர் அதனை ருசித்துவிட்டு மெய்மறந்து போனார்.
இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்தபோது கூட, டோலி சாய்வாலாவுக்கு, நாம் ஒரே நாளில் ஒபாமாவாகப்போகிறோம் என்பதெல்லாம் தெரியாது, இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலான போதுதான் இந்த உண்மை அவருக்குத் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் டோலி சாய்வாலாவிடம் நேர்காணல் நடத்தி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள்.
என்னிடம் வந்து தேநீர் கேட்டவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அவர் தேநீர் கேட்டதும், சுவையான தேநீர் தயாரிப்பதில்தான் எனது முழு கவனமும் இருந்தது. அவர் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்குத் தெரியவேயில்லை. இவ்வளவு பெரிய ஒரு நபரை நான் சந்திப்பேன் எனறு நினைக்கவேயில்லை என உணர்ச்சிப் பெருக்குடன் பேசுகிறார் டோலி சாய்வாலா.