உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தயாரிக்கும் மூலிகை தேநீர் உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பேசியது குறித்து...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தயாரிக்கும் மூலிகை தேநீர் உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.
மான்கிபாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச பெண்கள் தயாரித்து விற்பனை செய்துவரும் மூலிகைத் தேநீர் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
''தேநீர் வெறும் பானம் மட்டும் அல்ல. அனைத்து வகையிலும் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது. என் வாழ்விலும் தேநீரின் பங்கு குறித்து நீங்கள் நன்று அறிவீர்கள்.
தேநீர் வெறும் சுவையை மட்டும் அளிக்கவில்லை. சில பெண்களுக்கு வாழ்வாதாரத்தையும் அளித்திருக்கிறது. தற்சார்பு என்ற புதிய நறுமணத்தையும் கலந்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தின் லக்கிவாலா கிராமத்தில் சுய உதவிக் குழு பெண்கள், மூலிகைத் தேநீரைத் தயாரித்துள்ளனர்.
காவட்டம்புல், பச்சை மஞ்சள், ஏலக்காய், அதிமதுரம், மஞ்சள், சோம்பு போன்ற மூலிகைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகைத் தேநீர் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மிகக் குறைவான காலத்திலேயே அதிகப்படியான விற்பனையை எட்டியுள்ளது. கும்பமேளா உள்ளிட்ட பெருவிழாக்களில் இந்த மூலிகை தேநீர், அதிகப்படியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டவர் பலரையும் இது கவர்ந்துள்ளது. ஒட்டுமொத்த முயற்சியும் ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டது. தற்போது பெரிய பிராண்டுகளின் அளவுக்கு வரவேற்பை எட்டியுள்ளது.
பெண்களின் சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்'' எனக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், ''காதி விற்பனை மையத்தின் கைவினை பொருட்களை ஒரு முறையாவது வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்.
குஜராத்தில் ஒரே நாளில் 35 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது; அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரம் நட வேண்டும். இல்லங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்'' என பிரதமர் மோடி பேசினார்.
Herbal tea from UP women gaining global attention
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.