முகப்பு
இந்தியா

பிரிஜ் பூஷண் மகனின் கார் மோதி சிறுவர் உள்பட இருவர் பலி!

பாஜக வேட்பாளரும் பிரிஜ் பூஷண் மகனுமான கரணின் கார் மோதி விபத்து.

Updated On : 29 மே, 2024 at 2:43 PM
- DOTCOM
பகிர்:
Updated On : 29 மே, 2024 at 1:05 PM

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகனும் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான கரண் பூஷண் சிங்கின் கார் மோதியதில் சிறுவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.

மேலும், ஒரு சிறுவன் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் பிரஜ் பூஷண் குடும்பத்தினரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், விஐபி என்று எழுதப்பட்டிருந்த அந்த காரில் கரண் பூஷண் பயணித்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

Advertisement

உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில், இன்று (மே 29) பாஜக வேட்பாளரான கரண் பூஷண் சிங்கின் கார் வேகமாக வந்ததில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியுள்ளது. இதில், 17 வயது சிறுவனும் 24 வயது இளைஞரும் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சாலையைக் கடக்க முயன்ற மற்றொரு பெண் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காரின் ஏர்பேக்குகள் திறக்கப்பட்டு காரும் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. விபத்தின் போது காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Updated On : 29 மே, 2024 at 1:36 PM

உயிரிழந்தவர்களின் தாயார் சந்தா பேகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ஷாஜாத் கான்(வயது 24), மகன் ரெஹான் கான்(வயது 17) மருந்து வாங்க பைக்கில் சென்றுள்ளனர். சடாய் புர்வா பேருந்து நிறுத்தத்திற்கு முன், எதிர் திசையில் இருந்து வந்த கார் கவனக்குறைவில், பைக்கை அதன் வலதுபுறத்தில் இருந்து அதிக வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ரெஹான் மற்றும் ஷாஜாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பைக் ஓட்டுநர் ரெஹான் கான் மற்றும் ஷாஜாத் கான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில், பலத்த காயமடைந்த சீதா தேவி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.