கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்! இந்தியா அதிருப்தி
கனடாவில் ஹிந்துகள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
கனடாவில் ஹிந்துகள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஹிந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர்.
Advertisement
இதனையடுத்து கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொடிக்கம்பங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த ஹிந்து மக்களை விரட்டியடித்தனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் பரவியது.
இந்தியா அதிருப்தி
கனடாவில் ஹிந்துக்கள் மீதும் ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா ஆழ்ந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஒட்டவாவில் உள்ள உயர் ஆணைய அதிகாரிகள் இது குறித்து தெரிவித்ததாவது, டொரன்டோவிலுள்ள தூதரக முகாமிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஹிந்து கோயில்கள் மீதும் ஹிந்து பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கனடாவில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக, வழக்கமான தூதரகப் பணிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குமாறு கனடிய அதிகாரிகளிடம் முன்கூட்டியே இந்தியா சார்பில் கோரப்பட்டது.
எனினும் எங்கள் பணிக்கு இடையூறு விளைவிக்கும் இது போன்ற செயல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!