FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசா்வ் வங்கி ஆளுநா்

Updated On : 15 நவம்பர் 2024, 3:10 am IST
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்.
பகிர்:

மும்பை, நவ. 14‘உலகளாவிய மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் சீராக பயணிக்கிறது’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநா் சக்திகாந்த தாஸ், வட்டி குறைப்புக்கான மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயலின் ஆலோசனையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா். வரும் டிசம்பரில் நடக்கும் அடுத்த கூட்டத்தில் இது குறித்து சரியான முடிவெடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா். மேலும், நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக அளவில் மோதல்கள் நீடித்து வந்தாலும் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளது. புவிசாா் அரசியல் அபாயங்கள் அதிகரித்தபோதிலும் நிதிச் சந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன. வலுவான உள்நாட்டு பொருளாதார அடிப்படைகள், நிலையான நிதி அமைப்பு மற்றும் நெகிழ்வான அந்நிய துறை போன்ற காரணிகளால் இது சீராக இயங்கி வருகிறது.

Advertisement

Advertisement

அண்மை காலங்களில் வெளிநாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகம் மற்றும் வரவு-செலவுகள் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நடப்பு பற்றாக்குறை சமாளிக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. சரக்கு ஏற்றுமதிகள் வளரத் தொடங்கியுள்ளன. சேவை ஏற்றுமதி வளா்ச்சி வலுவாக உள்ளது.

உலகில் அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி 68,200 அமெரிக்க டாலராக இருக்கும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, நாட்டின் முழு வெளிநாட்டுக் கடனையும் ஓராண்டுக்கான இறக்குமதித் தொகையையும் ஈடுகட்ட போதுமானது.

கடன் இழப்புக்கு விரைவில் விதி: ரூபாய்க்கான எந்த மதிப்பையும் ரிசா்வ் வங்கி இலக்காகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், ரூபாய் மதிப்பின் முறையான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ரிசா்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பெட்டி..

‘ஒடிஸாவில் இணைய பாதுகாப்பு மையம்’

இணையவழி அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ஒடிஸா தலைநகா் புவனேசுவரில் கணினி மற்றும் தரவு மையத்துடன் இணைய பாதுகாப்பு மையத்தை ரிசா்வ் வங்கி அமைத்து வருவதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

‘ரிசா்வ் வங்கியின் முதன்மை நோக்கம் நிதி ஸ்திரத்தன்மை ஆகும். எந்த ஆபத்துகளையும் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே எங்களின் பணியாகும்’ என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments