முகப்பு
இந்தியா

ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 16.8 கோடி பணம் வாங்கிய செபி தலைவர் மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

செபியில் பணிபுரியும்போது ஐசிஐசிஐ வங்கியிடம் சம்பளமாக ரூ. 16.8 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.

Updated On : 2 செப்டம்பர் 2024, 3:35 pm IST
செபி தலைவர் மாதவி புரி புச் / காங்கிரஸ் தலைவர் பவன் கேரா
பகிர்:

செபியில் பணிபுரியும்போது ஐசிஐசிஐ வங்கியிடம் சம்பளமாக ரூ. 16.8 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதவி புரி புச் செபியின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் ஐசிஐசிஐ வங்கி மீதான முறைகேடுகளில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களிடம் 16.80 கோடி வரை சம்பளமாகப் பெற்றதாக இன்று காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

அதானி குழுமத்தின் நலனில் முரண்பாடு ஏற்படும் என்ற காரணத்திற்காக அவர்களிடம் செபி முழுமையான விசாரணை நடத்தவில்லை என ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “பங்குச்சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தை ஒழுங்குப்படுத்துவதே செபியின் வேலை. இது முதலீடு விஷயத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால், நமது நாட்டில் சதுரங்க ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியான மாதாபி புரி பச் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

மாதவி புரி புச் ஏப்ரல் 5, 2017 முதல் அக்டோபர் 4, 2021 வரை செபியின் நிரந்தர உறுப்பினராக இருந்தார். பின்னர், மார்ச் 22,2022 முதல் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டார்ர்.

செபியின் தலைவரை நியமிக்கும் குழுவில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், மாதவி செபியின் முழுநேர ஊழியராக இருந்தபோது ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கடந்த 2017 முதல் 2024 வரை வழக்கமான சம்பளமாக ரூ. 16.80 கோடி வரை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல், பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ஈஎஸ்ஓபி), ஈஎஸ்ஓபி வரிவிலக்கு ஆகியவற்றையும் பெற்று வந்துள்ளார்.

செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த நீங்கள் எதற்காக ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து சம்பளம் பெற்றீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.

இது செபியின் விதிகளில் பிரிவு 54 -ஐ மீறுவதாகும். எனவே, மானம் இருந்தால் மாதவி புரி புச் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது.



இந்த நிலையில், அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த மாதம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாதவி புச் பதவி மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.