நிலையான தேர்தல் களம் இருந்திருந்தால் மக்களவைத் தேர்தலில் பாஜக இன்னும் குறைவான இடங்களையே பெற்றிருக்கும் என பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல தரப்பு மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
அந்த வகையில், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுடன் உரையாடியபோது, 'இந்தியாவில் நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜகவால் 240 இடங்களைகூட பெற்றிருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு என்ன தேவையோஅதைத்தான் தேர்தல் ஆணையமும் செய்தது. இதனை நியாயமான தேர்தலாக நான் பார்க்கவில்லை' என்று கூறியிருந்தார். இதற்கு பாஜக தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
"எங்களுக்கு நிலையான களம் இருந்திருந்தால், சம வாய்ப்பு அளித்திருந்தால் பாஜக இதைவிட குறைவான இடங்களையேப் பெற்றிருக்கும். பாஜக எதிர்ப்பாளர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவிவிடுவது ரகசியம் ஒன்றுமில்லை.
மகாராஷ்டிரத்தில் மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் செய்த தவறுகள் எல்லாம் சரி செய்யப்படுகிறது.
இருப்பினும் 400-க்கும் அதிகமான இடங்கள் பெறுவோம் என்று கூறியவர்கள், 240 ஆகக் குறைந்துள்ளனர். இது ஆரம்பம்தான். தற்போதைய ஆட்சியில் மக்களின் அதிருப்தி இன்னும் தீவிரமடையப் போகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.