ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் பலியானது பற்றி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்மாநில காவல் துறையினர் மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வொய்ட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று (ஏப்.24) ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹவில்தார் ஜாந்து அலி எனும் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜாந்து அலியை மீட்க மருத்துவ முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!