தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி வங்கதேசத்தினர் கைது.
தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் வங்கதேச நாட்டைச் சேர்ந்த 5 பேர் நுழைய முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தில்லி காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அவர்கள் அனைவரின் வயதும் சுமார் 20-25 ஆக இருக்கும், அவர்கள் தில்லியில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்களிடமிருந்து சில ஆவணங்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர். தற்போது, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
மேலும், சுதந்திர நாள் பாதுகாப்பு பயிற்சிக்காக, சிறப்பு பிரிவு காவல் துறையினர் மறைத்து வைத்திருந்த போலி வெடிகுண்டுகளை, கண்டுபிடிக்கத் தவறியதற்காக தில்லி காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.