இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக சுதர்சன் ரெட்டி இருப்பார்! என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று (ஆக. 19) தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:
‘குடியரசு துணைத் தலைவர் போட்டியானது ஒரு கொள்கை சித்தாந்த ரீதியிலான போராட்டம்.
இந்த நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் பி. சுதர்சன் ரெட்டியைக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான ஒருமித்த வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளோம்.
பி. சுதர்சன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான மதிப்பிற்குரிய நீதிமான்களில் ஒருவராவார். சட்டத்துறையில் நெடுங்காலம் திறம்பட பயணித்த அனுபவத்தைக் கொண்டவர். அவர், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி, குவாஹாட்டி (அஸ்ஸாம்) உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ; உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சமூக, பொருளாதார, அரசியல் நீதிக்காகத் தொடர்ந்து போராடும் துணிச்சலான சாதனையாளர்.
நமது நாட்டின் விடுதலை இயக்கத்தை வடிவமைத்த மாண்புகளை, எவற்றின் மீது நமது நாட்டின் அரசமைப்பும் ஜனநாயகமும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அந்த மாண்புகளை முழுமையாக அவர் பிரதிபலிப்பார்.
இந்த மாண்புகள் அனைத்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எனவே, நமது ஒருங்கிணைந்த தீர்க்கமான முடிவால் இந்தத் தேர்தலில் போராட வேண்டும்’ என்று தமது எக்ஸ் தளப் பக்கத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.