புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி சநாதன தர்மத்தின் தூதர் என பாஜக எம்பி கங்கனா ரணாவத் கூறியுள்ளார்...
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு பகவத் கீதையைப் பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி, சநாதன தர்மத்தின் தூதர் என பாஜக மக்களவை உறுப்பினர் கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (டிச. 4) தில்லி வந்தடைந்தார். அவரை விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஆரத்தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
இதையடுத்து, அதிபர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.
பிரதமரின் இந்தச் செயல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாகியது. இருப்பினும், பாஜக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய நடிகையும், பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடி சநாதன தர்மத்தின் தூதர் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“கீதை உலகளாவிய உண்மையின் பாரம்பரியம். நமது பிரதமர் சநாதன தர்மம் மற்றும் இந்திய கலாசாரங்களின் தூதர். கீதையில் உள்ள உண்மை எப்போதும் நம்மை ஊக்குவிக்கும். வேதங்களில் கர்மா, உணர்ச்சிகள் மற்றும் குடும்பம் பற்றிய ஆழமான போதனைகள் உள்ளன. அதிபர் புதின் கீதையைப் படித்தால் இந்தியா மற்றும் நமது மக்களுடனான அவரது பிணைப்பு மேலும் வலுவடையும்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க: இந்தியாவின் எரிபொருள் வழங்குநராக ரஷியா எப்போதும் விளங்கும்: அதிபர் புதின்