பி.ஆர். கவாய் மீது காலணி வீசியவரை காலணியால் தாக்கிய மர்ம நபர்கள்!
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நீதிமன்றத்திற்குள் காலணி வீசித் தாக்க முயன்ற வழக்குரைஞர் மீது காலணி வீச்சுத் தாக்குதல்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நீதிமன்றத்திற்குள் காலணி வீசித் தாக்க முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது இன்று காலணி வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தில்லி நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் வாக்குவாதத்தின்போது மர்ம நபர்கள் காலணி கொண்டு அடுத்தடுத்து அவரைத் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் விடியோவில், நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள் நடந்து செல்கின்றனர். அப்போது அங்கு சென்றுக்கொண்டிருந்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்குகின்றனர். அவர்களை தடுக்கும் வகையில் சில வழக்குரைஞர்கள் அங்கு கூடும்போது, அவர் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் நடந்தபோது வளாகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனரா? என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை. இந்த விடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். கவாயை, அக்., 6 ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது காலணி வீசித் தாக்க முயன்ற சம்பவத்தில் பலரால் அறியப்பட்டவர் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர்.
காலணியை வீசியதும் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ராகேஷ் கிஷோா் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் பிரிவு 15-இன் கீழ் அனுமதி கோரி அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணிக்கு வழக்குரைஞா் கே.ஆா்.சுபாஷ் சந்திரன் கடிதம் எழுதினாா். உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பிலும் இதுதொடா்பான கடிதம் அட்டா்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டது.
இதையும் படிக்க | தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!