பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை..
சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
இதற்காக, கூடுதலாக ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் தங்களது வணிகத்தை விரிவாக்குவதற்கு இந்த கடன் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கடன் அட்டையைப் பெற, சிறு தொழில் நிறுவனர், தனது நிறுவனத்தைப் பதிவு செய்து, அதற்கான தகுதிகள் இருக்கும்பட்சத்தில் கிரெடிக் கார்டு பெற முடியும்.
சிறு வணிக நிறுவனங்கள், கடைகள், சிறு, குறு தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை நடத்துவோர், இதில் பயன்பெற முடியும். இந்த கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் வங்கிப் பரிவர்த்தனைகள், தொழில் நிறுவனத்தின் நிலை என பல்வேறு விஷயங்களும் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த கடன் அட்டைக்கான பயன்பாட்டுக் காலம் ஓராண்டுகள். இந்த கடன் அட்டையைப் பெற, ஆண்டுக்கு ரூ.10 முதல் 25 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோரே தகுதி பெறுவார்கள். இந்த தகுதி உடையவர்கள் உதயம் (UDYAM) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதாவது msme.gov.in இணையதளத்துக்குச் சென்று குயிக் லிங்க்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு உதயம் ரெஜிஸ்டிரேஷன் (பதிவு) என்பதை தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து பதிவேற்ற வேண்டும்.
இதையும் படிக்க.. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இதைச் செய்யாவிட்டால்?
இதுவரை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்யப்படாத அல்லது புதிய தொழில் முனைவோர்களாக இருந்தால் இதுவரை பதிவு செய்யப்படாத தொழில்முனைவோர் என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து அதில் ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு, செல்போன் எண்ணை வழங்கினால் அதற்கு ஒரு ஓடிபி வரும், அதன் மூலம், ஒருவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பிறகு, அவரது வணிக நிறுவனத்தின் விவரங்களைப் பதிவு செய்து, சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பத்தை மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து தகுதி உடையவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் என்று கூறப்படுகிறது.