FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘பிரேக்கிங் பேட்’ பாணியில் போதைப் பொருள் தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது!

‘பிரேக்கிங் பேட்’ பாணியில் போதைப் பொருள் தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 10 ஜூலை 2025, 5:38 pm IST
பிரேக்கிங் பேட் தொடரும் ஆசிரியர்களும்...
பகிர்:

ராஜஸ்தானில் ‘பிரேக்கிங் பேட்’ வெப் தொடர் பாணியில் போதைப் பொருள் தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் பிரபல குற்றவியல் தொடரான பிரேக்கிங் பேட் வின்ஸ் கில்லிகன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தத் தொடர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவில் இந்தத் தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தத் தொடரைத் தழுவி பல்வேறு போதைப் பொருள் தொடர்பான படங்களும் வெளியாகியிருக்கின்றன.

இந்தத் தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 50 வயது மதிக்கத்தக்க வேதியியல் ஆசிரியர் ஒருவர் பாதியில் கல்லூரி படிப்பை விட்ட இளைஞர் ஒருவருடன் இணைந்து போதைப் பொருள் தயாரித்து, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

இதேபோன்ற சம்பவம் தற்போது நமது நாட்டிலும் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மற்றும் பயிற்சி மையத்தில் வேலை பார்க்கும் இயற்பியல் ஆசிரியர் இருவரும் இணைந்து மெஃபெட்ரோன் என்ற போதைப் பொருளைத் தயாரித்த வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போதைப் பொருள் ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கங்காசாகர் மாவட்டத்தில் முக்லவாவில் அரசுப் பள்ளியில் பணியாற்றிவரும் அறிவியல் ஆசிரியர் மனோஜ் பார்கவ் (25) மற்றும் ராஜஸ்தான் நிர்வாக சேவைக்காக படித்துக் கொண்டிருக்கும் இந்தரஜித் விஷ்னோய் ஆகியோரை போதைப் பொருள் தயாரித்த குற்றத்துக்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைவர் கன்ஷ்யாம் சோனி கூறும்போது, “இவர்கள் போதைப் பொருளுக்கான மூலப் பொருளை தில்லியில் இருந்து வாங்கியுள்ளனர். மேலும், அவர்கள் விடுமுறை எடுத்து போதைப் பொருள் தயாரித்து வந்துள்ளனர்.

சுமார் 4.22 கிலோ எடையுடைய ரூ.15 கோடி மதிப்பிலான போதைப் பொருளை அவர்கள் இருவரும் தயாரித்துள்ளனர். சோதனையில் ரூ.2.34 கோடி மதிப்பிலான 780 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அசிட்டோன், பென்சீன், சோடியம் ஹைட்ரோ கார்பனேட், புரோமின், மெத்திலமைன், ஐசோபுரோபைல் ஆல்கஹால், 4-மெத்தில் புரோபியோபீனோன் மற்றும் என்-மெத்தில்-2-பைரோலிடோன் போன்ற முக்கிய ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

summary

'Breaking Bad' In Rajasthan: 2 Teachers Make Drugs Worth Rs 15 Crore, Arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments