மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது தோழி மீது குற்றம் சாட்டியதற்கு மன்னிப்புகோரி எக்ஸ் பதிவு
மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திரா பதிவிட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி.யும் ஜீ செய்திகள் நிறுவன உரிமையாளருமான சுபாஷ் சந்திராவின் எக்ஸ் பதிவில் கூறியதாவது, சுஷாந்த் சிங் மரண வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. முன்னர், இந்த தற்கொலை வழக்கில் ரியா சக்ரவர்த்தி மீது ஜீ செய்திகள் குற்றம் சாட்டியது.
ரியா மீது குற்றம் சாட்டியதற்காக, ஜீ செய்திகளின் உரிமையாளர் மற்றும் வழிகாட்டி என்ற முறையில் ரியா சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ரியா சக்ரவர்த்தியிடம் சுபாஷ் சந்திரா மன்னிப்பு கோரும் விவகாரத்தின் மூலம், இனிவரும் நாள்களில் செய்தி ஊடகங்களில் இதுபோன்ற போலியான, திரிக்கப்பட்ட, உண்மைத்தன்மை அறியாத செய்திகளைப் பரப்பும் சம்பவங்கள் குறையும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை சம்பவத்தில் அவரது தோழி ரியா சக்ரபர்த்திக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, சில செய்தி ஊடகங்களும் ரியா மீது பல்வேறான கோணங்களில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று கடந்த வார இறுதி அறிக்கையில் சிபிஐ கூறியது.