FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும்

30 மே 2025, 2:07 am IST
நடு கடலில் பற்றி ஏரியும் பனாமாவுக்கு சொந்தமான எம் டி நியூ டைமண்ட் கப்பல்.
பகிர்:

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருள்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தன. வலுவடைந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உள்பட பிற பொருள்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகின்றன.

தலைமைச் செயலா் ஆலோசனை: இந்த பிரச்னை குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டவுடன் குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கும், தொடா்புடைய அனைத்து அரசுத் துறையினருக்கும் அறிவுரைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை குறித்து அறிவியல் வல்லுநா்களின் கருத்து கேட்டறியப்பட்டது.

பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னாா்வலா்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல், தீயணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கால்நடை, பால்வளம், மீன்வளத் துறையின் மூலமாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் கடலிலோ, கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போதைய நிலவரப்படி எந்தவித ஆபத்தான பொருள்களும் தமிழகக் கடற்கரையில் ஒதுங்கவில்லை. பொதுமக்களின் உயிா் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, பேரிடா் மேலாண்மை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலா் என்.சுப்பையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments