தில்லி குண்டுவெடிப்பு! உமர் பேசிய விடியோ கிடைத்தது எப்படி? அதிர்ச்சித் தகவல்
தில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் பேசிய விடியோ எப்படி கிடைத்தது என்பது குறித்து தகவல் வெளியானது.
தற்கொலைத் தாக்குதல் பற்றி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருவதாகவும், அது ஒரு தியாகச் செயல் என்றும் உமர் பேசி வெளியான விடியோ, அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி கார் குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருந்த உமர் உன் நபி, அல் பலாஹ் பல்கலை அறையில் அமர்ந்து பேசிய விடியோ ஒன்று நேற்று வெளியாகியிருந்தது. தற்கொலைப் படைத் தாக்குதலை தியாகச் செயல் என்று அழைக்க வேண்டும் என்று தன்னுடைய பயங்கரவாதச் செயலுக்கு உமர் நியாயம் கற்பித்திருந்தார் அந்த விடியோவில்.
அந்த விடியோ, புல்வாமாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைப்பற்றட்ட உமரின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
இந்த செல்போனை, உமரின் சகோதரர் முதலில் குளத்தில் தூக்கி எறிந்துவிடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால், அவர் அதனை புலனாய்வு அமைப்பிடம் கொடுத்திருந்ததாகவும் தில்லி குண்டுவெடிப்புக்கு முன்பு அந்த விடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற பேச்சுகள், ஐஎஸ்ஐ நடத்தும் பல மூளைச் சலவை குறிப்புகள் என்றும், ஏற்கனவே, இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆள் சேர்ப்பில் ஈடுபடும் ஹபீஸ் சயீத் இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவரது பேச்சைப் பார்க்கும்போது, இவர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைத் தாக்குதல் என்பது பயங்கரவாத நடவடிக்கை அல்ல, அது தியாகச் செயல் என்று அவர் தீர்க்கமாக நம்பும் வகையில் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது.
தான் செய்யப்போதும் இந்த செயலுக்காக அவர் சிறப்பாக பாராட்டப்படுவார் என்று கருதியிருக்கிறார். கேமராவை அவர் உற்றுப் பார்க்கவில்லை. ஏதோ தானே சிந்தித்துப் பேசுவதுபோல பேசுகிறார், ஆனால், அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வாக்கியங்கள் என்பதை அவரது முக பாவனை காட்டுகிறது. அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக இருந்ததையும் விடியோ மூலம் தெரிய வருகிறது என்று விடியோவை மனநல மருத்துவர்களிடம் காண்பித்து, அவர்கள் கொடுத்த குறிப்புகளை புலனாய்வு அமைப்பினர் சேகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.