முகப்பு
இந்தியா

பயங்கரவாதம், போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

தென்னாப்பிரிக்கா ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து...

Updated On : 22 நவம்பர், 2025 at 1:05 PM
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
பகிர்:

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில், போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகளின் நடவடிக்கை வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில், ஜி20 உச்சி மாநாடு இன்று (நவ.22) தொடங்கியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு நாளை நிறைவடைகின்றது.

இந்த நிலையில், இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்த ஜி20 அமைப்பின் புதிய முயற்சியில் நிதி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்மொழிந்தார்.

இந்த முயற்சியின் முன்னுரிமையாக, போதைப் பொருள் கடத்தல் வழிகளைத் தடுப்பது, சட்டவிரோத நிதிகளை சீர்குலைப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான முக்கிய நிதி ஆதாரத்தை பலவீனப்படுத்துவது ஆகியவை இருக்கும் எனக் கூறிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை மூலம் மட்டுமே இந்த சவாலை எதிர்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஃபெண்டானில் போன்ற ஆபத்தான போதைப் பொருள்களின் பரவல் மற்றும் கடத்தலைத் தடுக்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருளாதாரத்தை அகற்றவும் அவசரத் தேவை உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இத்துடன், ஜி20 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடக்கிய அவசரகால சுகாதாரக் குழுவை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இதுபற்றி, அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,

“ஜி20 சுகாதாரக் குழுவை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது. சுகாதார அவசரநிலை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டால்தான் வலிமையுடன் எதிர்கொள்ள முடியும். ஜி20 நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: உ.பி.: அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர் மீது நடவடிக்கை

summary

Prime Minister Narendra Modi has urged global action against drugs and terrorism at the G20 summit in South Africa.

முழு கட்டுரையைப் படிக்க →