இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!
தெலங்கானாவில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைக்கப்பட்டதைப் பற்றி...
தெலங்கானாவில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதனால், தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பயணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு(பிசி பிரிவினர்) 42 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.
தெலுங்கானா உயர் நீதிமன்றம் அக்டோபர் 9 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வெடித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இதனால், போராட்டம் தீவிரமடைந்து, முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் பல அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்கள் கடைகளையும் பெட்ரோல் பம்ப்புகளையும் அடித்து உடைத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பணிமனைகளிலேயே இருந்ததால் பொதுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், தீபாவளிக்கு வெளியூர் செல்லவிருந்த பயணிகள், பேருந்து நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
காங்கிரஸ் அமைச்சர்களான பொன்னம் பிரபாகர், வகிதி ஸ்ரீஹரி, சீதக்கா, கொண்டா சுரேகா, எம்பி அனில் யாதவ் ஆகியோர் ஹைதராபாத்திலும், அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் சத்துப்பள்ளியில் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியினரிடையே, பிஆர்எஸ் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் பேரணிகளில் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தெலங்கானா ஸ்தம்பித்தது.