காங்கிரஸ் நிர்வாகியைக் குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு! இருவர் காயம்!
காங்கிரஸ் நிர்வாகியைக் குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது பற்றி...
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் அலுவலகத்துக்கு வெளியே மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மஸ்தூரி நகரில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் நிதேஷ் சிங் என்பவர் அவரது அலுவலகத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது முகமுடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், நிதேஷ் சிங்கை நோக்கி 10 முதல் 12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் நிதேஷ் சிங் காயமின்றி தப்பிய நிலையில், அவரின் சகோதர் ராஜு சிங், உறவினர் சந்திரகாந்த் சிங் ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. சந்திரகாந்த் சிங்கின் காலிலும், ராஜுவின் இடது கையிலும் குண்டு பாய்ந்துள்ளது. பிலாஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் நலமுடன் உள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவர் கைத்துப்பாக்கிகள், ஒருவர் நாட்டுத் துப்பாக்கியில் சுட்டுள்ளனர். தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடி வருகிறோம். அரசியல் பகை காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.