FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக

Updated On : 2 செப்டம்பர் 2025, 3:33 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கரும்பு, சோளம் உள்ளிட்டவற்றில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலுடன் 10 சதவீதம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்த கட்டமாக இதனை 20 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

இ20 பெட்ரோல் என அழைக்கப்படும் இந்த எரிபொருளுக்கு ஏற்ப இப்போது புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும் என்று பழைய வாகனங்களில் இந்த பெட்ரோலைப் பயன்படுத்தினால் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் துருப்பிடிப்பது முதல் வாகனத்தின் என்ஜின், செயல்திறனில் பாதிப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

Advertisement

அதே நேரத்தில், எத்தனாலை பெட்ரோலில் 20 சதவீதம் கலந்து பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் விவசாயிகளின் வருவாயை உயா்த்துவதற்கான திட்டம். இ20 பெட்ரோல் சிறந்த உந்துசக்தியைத் தருவதுடன் இ10 பெட்ரோலைவிட சுமாா் 30 சதவீதம் குறைந்த காா்பன் உமிழ்வையே ஏற்படுத்துகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின்மூலம், பொதுத் துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.44 லட்சம் கோடிக்கும் மேல் அந்நிய செலாவணியை சேமித்துள்ளன. அதே வேளையில், எத்தனாலின் சராசரி விலை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலையை விட அதிகமாக உள்ளது. இதனால், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை குறையவில்லை’ என்று பெட்ரோலிய அமைச்சகம் அண்மையில் தெளிவுபடுத்தியது.

இந்நிலையில் இ20 பெட்ரோலுக்கு எதிராக தாக்கல் செயல்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல் நிலையங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாடிக்கையாளா்களுக்கு தகவல் கூறாமல் இ20 பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே இந்த வகை பெட்ரோலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கான மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வாகனங்களையே தற்போது பயன்படுத்தி வருகின்றனா். இந்த இ20 பெட்ரோலால் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். எனவே எத்தனால் கலக்காத பெட்ரோலை தனியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோல் தனியாக விற்பனைக்கு உள்ளது. இந்த பெட்ரோலை தோ்வு செய்வது என வாடிக்கையாளா்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் அதே நடைமுறை வேண்டும் என்று மனுதாரரான வழக்குரைஞா் அக்ஷய் மல்ஹோத்ரா வாதிட்டாா்.

ஆனால், மத்திய அரசு சாா்பில் வாதிட்ட அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘இந்த விஷயத்தில் மனுதாரா் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனுவின் பின்னணியில் வேறு பெரிய நபா்கள் உள்ளனா். அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்துதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்றாா். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments