அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!
பிரதமர் மோடி அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி விமர்சனம்...
எரிபொருள் விலை அதிகரித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய வயநாடு மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தி, எரிபொருள் விலைவுயர்வு விவகாரத்தில் இந்தியாவுக்காக பிரதமர் மோடி துணிந்து நிற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எல்.பி.ஜி. உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் வர்த்தகம் மேலும் கடினமான நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இவை அனைத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காகத் துணிந்து நிற்கவில்லை. அவர் செய்வது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பணிந்துபோவது மட்டுமே” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அசாமில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப். 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.