பினராயி விஜயனை கட்டுப்படுத்தும் பிரதமர் மோடி: ராகுல்
கேரள முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்
கேரள முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடதுசாரி என்று ஒன்றுமில்லை. தேர்தலுக்குப்பின், இடதுசாரியில் எதுவும் மிஞ்சியிருக்காது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியை மறைமுகமாக ஒரு கை இயக்கி வருகிறது. அந்தக் கை மதவாதம் கொண்ட ஒன்று. அது இந்திய அரசியலமைப்பை ஏற்காததுடன், மக்களைப் பிளவுபடுத்தவும் முயற்சிக்கிறது.
Advertisement
இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இடது முன்னணி இடையே ஓர் உறவு ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
சிபிஐ(எம்) மற்றும் இடது முன்னணியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் இதனை அறிவார்கள். இடது முன்னணியில் இரு வகையான தலைவர்கள் உள்ளனர்.
ஆட்சிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஆட்சிக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் என யாரின் உதவி குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
மற்றொரு புறம், சந்தர்ப்பவாதிகள் அல்லாத தலைவர்கள். இவர்கள் நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக கொள்கைக்காக மட்டுமே உழைக்கின்றவர்கள். ஆனால், அவர்கள் இப்போது வீழ்த்தப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் வருத்தமடைகின்றனர்.
பிரதமர் மோடியையும் அதானியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார்.
வரும் மாதங்களில் பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் விலை உயரும்போது, இந்தக் கூட்டணியின் பின்விளைவுகளை மக்கள் அறிவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்டது குறித்து, கேரளத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை" என்று தெரிவித்தார்.