எஸ்ஐஆர் நடவடிக்கையால் எனக்கு 10,000 வாக்குகள் இழப்பு! - கேரள முன்னாள் முதல்வரின் மகன் பேச்சு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 10,000 வாக்குகளை இழந்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ சாண்டி உம்மன் பேச்சு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் (எஸ்ஐஆர்) தனக்கு 10,000 வாக்குகளை இழப்பு ஏற்பட்டதாக, கேரளத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று நிறைவடைந்தது. அம்மாநிலத்தில் 77.93% வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலின் முடிவுகள் வரும் மே 4 அன்று வெளியிடப்படவுள்ளன.
இந்த நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், சுமார் 10,000 வாக்குகளை தான் இழந்துள்ளதாக, கேரளத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகனும், புதுப்பள்ளி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எனக்கு வாக்களிக்க விரும்பிய பலரும் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றதும் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை உணர்ந்து என்னிடம் கூறியுள்ளனர். எனவே, நான் இதை வாக்குகளை விடவும் பெரிய இழப்பாக உணர்கிறேன். சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஏராளமான மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தத் தேர்தலில், கேரளத்தின் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.