தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைப் பறிக்க பாஜக சதி! - தெலங்கானா முதல்வர்
மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைப் பறிக்க பாஜக சதி செய்வதாக தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு...
தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைப் பறிக்க பாஜக சதி செய்வதாக தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை (ஏப்.14) தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆகையால், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
Advertisement
இதுகுறித்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தெரிவித்ததாவது:
கடந்த காலத்தில் தேசியக் கொள்கையின்படி, மக்கள் தொகைப் பெருக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பட்டியிலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசு இழப்பை ஏற்படுத்த விரும்புகிறதா?
மக்கள்தொகை அடிப்படையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், கேரளாவில் மக்களவை இடங்கள் 20-லிருந்து 30 ஆகவும், உத்திரப் பிரதேசத்தில் 80-லிருந்து 120 ஆகவும் உயரும்.
ஆகவே, தென்னிந்திய மாநிலங்களைப் புறக்கணித்து குஜராத் அல்லது உத்தரப் பிரதேசத்தில் தொகுதிகளை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி முயல்கிறார்.
ஒரு வட மாநிலத்தில் 30 இடங்கள் அதிகரித்தால், அங்கு பட்டியிலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இடங்கள் குறைந்தால் தென் மாநிலங்களில் உள்ள பட்டியிலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.